12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்செய்யும் வகையில் மாணவர்களுக்கு பள்ளி அளவில் தினமும் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் 11-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். இந்நிலையில் 12-ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் 5-ஆம் தேதி அன்று தொடங்கவிருந்த பொதுத்தேர்வு கொரோனா தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் நாளை மே 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டியதில்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேசமயம் ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது வீட்டில் இருந்து படித்து வரும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும். மேலும் பொது தேர்வுக்கு தேவையான முக்கிய வினாக்கள், பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமென ஒரு அலகுக்கு வினா விடைகள் தேர்வு செய்து அதை தினசரி மாணவர்களுக்கு அலகு தேர்வாக நடத்த வேண்டும்.
இந்த தேர்வு வினாத்தாள் தினமும் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து ஆசிரியர்களின் 'வாட்ஸ் ஆப்' குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வந்த வினாத்தாள்களை மாணவர்களுக்கு ஆன்லைனில் மூலம் பகிர்ந்து தினமும் தேர்வுகளை எழுத வைத்து விடைத்தாள்களை பெற வேண்டும். அவற்றை அனறே திருத்தி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரத்தை மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற கூடுதல் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு